குழந்தையின் பிறப்பு

குழந்தை பிறந்தவுடன் குழந்தை பிறந்த சரியான நேரம், தமிழ் தேதி, தமிழ் மாதம், தமிழ் ஆண்டு, நட்சத்திரம், பிறந்த ஊர் போன்றவற்றைகளை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆங்கில தேதியையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இவையனைத்தும் குழந்தையின் ஜனன ஜாதகம் கணிப்பதற்கு பயன்படும். பிறந்த குழந்தைக்கு நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து அவரவரின் ஆஸ்தான ஜோதிடரிடம் சென்று ஜாதகம் கணிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நமது சமுதாய மரபுப்படி முதல் பிறந்தநாள் மட்டும் தான் கொண்டாட வேண்டும். அதற்கு பின்பு சஷ்டியப்த பூர்த்தி தான் கொண்டாட வேண்டும். ஆனால் இன்றைய கால சூழ்நிலையில் சிலர் வருஷம் தோறும் பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்கள். அப்படி கொண்டாடுபவர்கள் ஆங்கில தேதியை விடுத்து பிறந்த ஜென்ம நக்ஷத்ர தினத்தில் கொண்டாடுவது தான் சிறப்பு.

பூப்பு புனித நன்னீராட்டு விழா

நமது சைவ வேளாளர் சமுதாயத்தில் தனது மகள் பூப்பெய்தி விட்டால் அந்த நேரம், நட்சத்திரம் ஆகியவற்றை குறித்து கொண்டு பூப்பெய்திய நாள் முதல் மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் அன்று மாலை வேளையில் வெள்ளி பூத்ததற்கு பின்பு பூப்பெய்திய மகளுக்கு தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். தலைக்கு தண்ணீர் ஊற்றும் வைபவத்திற்கு நாள் குறித்து கொண்டவுடன் தாய்மாமா − அத்தை, தந்தை வழி அத்தை மாமா, குடும்பத்தினர்கள், உற்றார் − உறவினர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் இல்லத்திற்கே சென்று வெற்றிலை, பாக்கு, இனிப்புகளுடன் நேரில் அழைக்க வேண்டும். தலைக்கு தண்ணீர் ஊற்றும் தினத்தன்று மேளதாளம் முழங்க பூப்பெய்திய மகளின் தாய்மாமா சீர்வரிசையை ஊர்வலமாக கொண்டு வரவேண்டும்.

பூப்பு புனித நன்னீராட்டு விழா

சீர்வரிசை கட்டாயமாக ஒரே தாம்பாளத்தில் இருக்க வேண்டும். சீர்வரிசையில் மஞ்சள், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பட்டுச்சேலை, இனிப்புகள், கண்ணாடி, சீப்பு, வளையல், ஒரு ஜோடி மாலை ஆகியவை இருக்க வேண்டும். பூப்பெய்திய நாள் முதல் மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் அன்று மாலையில் வெள்ளி பூத்த பின்பு (வானத்தில் விண்மீன் தெரிந்த பின்பு) தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். பூப்பெய்திய மகளின் தாய்மாமா வழி அத்தை ஆகியோர் தான் தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். தலைக்கு தண்ணீர் ஊற்றும் போது பூப்பெய்திய மகள் அணிந்திருந்த ஆடையை அவர்கள் ஊரில் அவர்களுக்கு என்று பரம்பரையாக உள்ள சலவை தொழிலாளரிடம் வெளுக்க கொடுக்க வேண்டும். தலைக்கு தண்ணீர் ஊற்றிய பின்பு வந்திருப்பவர்களுக்கு சந்தனம், குங்குமம், கற்கண்டு வழங்க வேண்டும். பூப்பெய்திய மகளுக்கு தாய்மாமா சீராக கொண்டு வந்த சேலையை உடுத்தி, மாலையை அணிவித்து மனையில் நிறுத்த வேண்டும். பூப்பெய்திய மகளின் பெற்றோர், தாய்மாமா − அத்தை, தந்தை வழி அத்தை − மாமா, குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், உற்றார் − உறவினர், நண்பர்கள் அனைவரும் விபூதி அணிவித்து ஆசிர்வதிக்க வேண்டும். வந்திருப்பவர்களுக்கு இரவு விருந்து உபசரிப்பு அளிக்க வேண்டும். நிறைவாக வந்திருப்பவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், சீனி வழங்க வேண்டும். இரவு பால் அன்னம் (பால்சோறு) அல்லது சர்க்கரை பொங்கல் தயாரித்து உற்றார் − உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்க வேண்டும். மறுநாள் மகளுக்கு உளுந்து சாதம், உளுந்து களி, உளுந்து வடை ஆகியவற்றை தாய்மாமா செய்து கொடுக்க வேண்டும். தீக்ஷை பெற்றோர், ஆன்மார்த்த சிவபூஜை செய்வோர் மற்றும் திருக்கோவில் கோமரங்கள் பூப்பெய்திய வீட்டில் 16 நாட்கள் உணவு, தண்ணீர் அருந்தக்கூடாது.

ருது மங்கள ஸ்நானம்

மகள் பூப்பெய்திய 16வது நாளன்று நாம் செய்யும் புண்யாஹவாஜனம் தான் ருது மங்கள ஸ்நானம் ஆகும். தற்போதைய காலங்களில் புரோஹிதரை வைத்து நமது வீட்டில் வைத்து புண்யாஹவாஜனம் செய்த பின்பு அவரவரின் பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப திருமண மண்டபங்களில் நடத்தி கொள்கிறார்கள். ருது மங்கள ஸ்நானத்தை நமது இல்லத்தில் வைத்தோ அல்லது திருமண மண்டபத்தில் வைத்தோ நடத்தலாம்.

விசேஷம் நடத்த தேவையான பொருட்கள்:

மணமேடையில் வைக்க:

நாட்டு பசுஞ்சாணத்தில் பிடிக்கப்பட்ட விநாயக பெருமான், மஞ்சள், திருவிளக்கு, கற்பூர ஆரத்தி தட்டு, தூபக்கால், தாம்பாளம், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, இலை, நெற்நாழி, நெல், விளக்குத்திரி, நாட்டு பசும்பால், கற்பூரம், சாம்பிராணி, அகர்பத்தி, சந்தனம், குங்குமம், திருவிளக்கு ஆரம், நாட்டு பசு கோமியம்.

புரோஹிதருக்கு தேவையானவை:

மஞ்சள்பொடி, கற்பூரம், சாம்பிராணி, அகர்பத்தி, தேங்காய், நெல், பச்சரிசி, இலை, நாட்டு பசுஞ்சாண விபூதி, பச்சைத்துணி, வெற்றிலை, பாக்கு, பழம், சந்தனம், குங்குமம், குடம், செம்பு, ஆரம், பூ சரப்பந்து, பன்னீர் பாட்டில், தாம்பாளம், ஹோமம் வளர்க்க சர்வசட்டி அல்லது ஹோம குண்டத்திற்கு தேவையான செங்கற்கள், மாஞ்சுள்ளி, நாட்டு பசுஞ்சாண வரட்டி, உமி. மேலே கண்ட பொருட்களை நாம் விசேஷம் நடத்தும் இடத்தில் தயாராக வைத்து கொள்ள வேண்டும். நல்ல நேரம் பார்த்து மகளை வீட்டிலிருந்து விசேஷம் நடைபெறும் மனைக்கு அழைத்து வர வேண்டும். ருது மங்கள ஸ்நானம் கழிக்க குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து முடிக்க வேண்டும்.

மகளின் தாய்மாமனார் சீர் கொண்டு வரும் வைபவம்:

ரெது சோபன விசேஷம் நடைபெறும் தினத்தன்று மகளின் தாய்மாமா மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக சீர் வரிசையை எடுத்து வர வேண்டும்.

சீர் வரிசையில் இருக்க வேண்டிய பொருட்கள்:

பெரிய விரலி மஞ்சள் 100 கிராம்.
முட்டா மஞ்சள் 50 கிராம்
மஞ்சள் பூசிய தேங்காய் 3 எண்ணங்கள்
நாட்டு வாழைப்பழம் 1 சீப்பு
வெற்றிலை 1 கட்டு
களிப்பாக்கு 50 கிராம்
ஆப்பிள் பழம் 3 எண்ணங்கள்
திராட்சை பழம் 1 கொத்து
ஆரஞ்சு பழம் 3 எண்ணங்கள்
மாம்பழம் 3 எண்ணங்கள்
பலாப்பழ சுளை சிறதளவு
சீனா கற்கண்டு 5 எண்ணம்
முகம் பார்க்கும் கண்ணாடி 1 எண்ணம்
பவுடர் டப்பா 1 எண்ணம்
குங்கும செப்பு 1 எண்ணம்
ரோஜா ஆரம் 1 எண்ணம்
மல்லிகை ஆரம் 1 எண்ணம்
தலையில் சூடுவதற்கு மல்லிகை பூ தேவையான அளவு
மலர் அலங்கார ஜடை 1 எண்ணம்
ஜம்பர் 1 எண்ணம்
பாவாடை 1 எண்ணம்
சோப்பு டப்பா 1 எண்ணம்


ஆகியவை ஒரே பெரிய தாம்பாளத்தில் இடம் பெற வேண்டும். மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்த சீர்வரிசையை விசேஷம் நடைபெறும் மணமேடையில் திருவிளக்கு முன்பு வைக்க வேண்டும்.



புரோஹிதர் குறித்த நேரத்தில் கும்பம் வைத்து ஹோமம் வளர்க்க வேண்டும். அந்த சமயம் பூப்பெய்திய மகளை அழைத்து மணமேடையில் ஜமுக்காளம் விரித்து அமரவைத்து தாய்மாமனார் கொண்டு வந்த சீர்வரிசையை தாய் − தந்தை மற்றும் குடும்ப பெரியோர்கள் ஆசீர்வாதத்துடன் மகளிடம் கொடுக்க வேண்டும். ஹோமம் நிறைவடைந்த பின்பு மகளை மணமேடையில் இருந்து அழைத்து வந்து விசேஷம் நடைபெறும் இடத்திற்கு வெளியே அழைத்து வந்து ஓரமாக கிழக்கு பார்த்து ஒரு நாற்காலியை வைத்து அதில் மகளை அமர வைக்க வேண்டும். புரோஹிதர் மற்றும் சுமங்கலி பெண்கள் ஹோம குண்டத்திலிருந்து மஞ்சள், பால், கும்பங்கள், கண்ணாடி, கும்பம் இவைகளை கொண்டு வர வேண்டும்.

பின்பு குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில் மகளுக்கு தாய் − தந்தை, தாய்மாமா − அத்தை, தந்தை வழி அத்தை − மாமா, குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் அனைவரும் மகளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்யும் அங்கிருக்கும் பெண்கள் "குலவை" ஒலி எழுப்ப வேண்டும். அபிஷேகம் நிறைவடைந்த பிறகு மகளை கண்ணாடியில் முகம் பார்க்க செய்ய வேண்டும். பின்பு மகளை அழைத்து சென்று தாய்மாமா சீராக கொண்டு வந்த பாவாடை, பட்டுப்புடவை, ஜம்பர் ஆகியவற்றை அணிவித்து, தாய்மாமா சீராக கொண்டுவந்துள்ள அலங்கார பொருட்களை கொண்டு அலங்காரம் செய்து, தாய்மாமா சீராக கொண்டு வந்துள்ள ரோஜா ஆரம் மற்றும் மல்லிகை ஆரம் ஆகியவற்றை அணிவித்து மகளை மணமேடைக்கு அழைத்து வந்து அமர வைக்க வேண்டும். மணமேடையில் புரோஹிதர் திருநீறு வழங்கி ஆசீர்வதிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து மகளின் தாய்−தந்தை, தாய்மாமா − அத்தை, தந்தை வழி அத்தை − மாமா மற்றும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் விபூதி அணிவித்து ஆசீர்வதிக்க வேண்டும். பின்பு மகளின் தாய்மாமா வழி அத்தை மற்றும் தந்தை உடன் பிறந்த அத்தை இருவரும் சேர்ந்து மகளுக்கு அடை பொரி சுற்றி மணமேடேயின் நான்கு புறமும் போட வேண்டும் தொடர்ந்து ஏற்றி இறக்குதல் செய்ய வேண்டும்.

(ஏற்றி இறக்கதல் என்பது ஒரு கையில் சந்தன கும்பாவும், மற்றொரு கையில் குங்கும சிமிழும் வைத்திருக்க வேண்டும்) பின்பு மகளை அழைத்து மணமேடையில் உள்ள நாற்காலியில் அமர வைக்க வேண்டும். அப்பொழுது உற்றார் − உறவினர்கள், வந்திருக்கும் விருந்தினர்கள் அனைவரும் மகளுக்கு விபூதி அணிவித்து ஆசீர்வதிக்க வேண்டும். ஆசீர்வாதங்கள் நிறைவடைந்த பிறகு மகளை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று பால் மற்றும் வாழைப்பழம் கொடுக்க வேண்டும். இவையனைத்தும் நிறைவடைந்த பின்பு வந்திருப்பவர்களுக்கு மதிய விருந்து அளித்து உபசரித்து அவர்களுக்கு தாம்பூலமும் வழங்க வேண்டும்.

விசேஷம் அனைத்தும் நிறைவடைந்த பிறகு மகளை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும். வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு முன்பு திருஷ்டி கழிக்க வேண்டும். இரவு விநாயகப்பெருமானுக்கு தேங்காய் விடலை திருக்கண் சாற்ற வேண்டும். விசேஷம் கழித்த மகளுக்கு திருஷ்டி கழிக்க வேண்டும். மறுநாள் மகளுக்கு உளுந்து சாதம் கொடுக்க வேண்டும். உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு விசேஷ பலகாரமாக உளுந்து களி மற்றும் உளுந்து வடையை வழங்கலாம். பூப்பெய்திய மகளை காத்து−கருப்பு, துஷ்டசக்திகள் தீண்டாமல் இருக்க கால் விரலில் இரும்பு மெட்டி அணிவது மரபு. பூப்பெய்திய மகளின் உடல் ஆரோக்யம் பெற நல்லெண்ணெய், அரைக்கீரை விதை கொடுக்க வேண்டும். உளுந்தங்களி, உளுந்தம்பருப்பு சாதம், உளுந்து வடை ஆகியவை அவ்வப்போது கொடுக்க வேண்டும்.

திருமண சடங்குகளும், விளக்கமும்!!

பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும். மாவிலை, நவதானியம், வெள்ளி நாணயம், பூ, தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும் அறிவிப்பு செய்து ஆசி பெறுவதுதான் இந்த கிரிகையின் நோக்கமாகும்

Tirunelveli Saiva Pillaimar Thali

நாட்கால் நடல்

இதை பந்தகால் நடுவது என்பார்கள். பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நட வேண்டும். மரத்தின் நுனியில், முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ மூன்றையும் இணைத்து கட்ட வேண்டும்.

பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம், பூ, நவ தானியம் இவற்றை போட்டு போட்டு பந்த கால் நட வேண்டும். சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டும்.

பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும். மாவிலை, நவதானியம், வெள்ளி நாணயம், பூ, தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும் அறிவிப்பு செய்து ஆசி பெறுவதுதான் இந்த கிரிகையின் நோக்கமாகும்

பொன்னுருக்குதல்

திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும். போற்றி பாதுகாக்க படவேண்டியது ஆகும். நல்ல நாளில், தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் (பொற்கொல்லர்) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும்

கலப்பரப்பு

மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி (தரையில் விரித்து) மணப் பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இரு வீட்டாரும் கலந்து ஒன்றாகி விட்டதற்கான அடையாள நிகழ்ச்சி (கலம் என்பது பாத்திரம்) ஆகும். பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை (மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழக்கள் பூச்சரம்) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும்

காப்பு கட்டுதல்

காப்பு என்பது அரண் போன்றது. மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது. திருஸ்டி மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு காப்புக் கட்டுவதில் இருந்து மறுநாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும். அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.

முளைப்பாலிகை

நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது. முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வதுபோல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச் சடங்கு. கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம். எனவே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின்றது

தாரை வார்த்தல்

தாரை என்றால் நீர் என பொருள். நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது. இப்படி தெய்வத் தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர். திருமணச்சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல். தாரை வார்த்த பின்பு தான் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான்.
என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன்என* மணமகளின் பெற்றோர், தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு – மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி.

எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க, அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை, மணமகனின் கை, மணப்பெண்ணின் கை, மணப்பெண்ணின் தந்தையின் கை, எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை. இந்த வரிசையில் கைகளை வைத்து இச்சடங்கு நடைபெறும். உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் எனப்படும்

தாலி கட்டுவது

தாலி என்பது மணமகன், மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும். மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும்
தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர், ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்த படியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்

பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.
ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.
(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் "மஞ்சள் கயிறு கட்டுதல்" ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது. தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர். ஆனால் அது தவறாகும். பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்
பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என்று கூறப்பட்டுள்ளது மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும். ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களை குறிக்கிறது. தெய்வீககுணம், தூய்மையான குணம், மேன்மை, தொண்டுள்ளம் தன்னடக்கம் ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல்... போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே, ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியபடுகிறது

ஹோமம் வளர்த்தல்

வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும். ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும். ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது. ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாகும்.

கும்பம் வைத்தல்

கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம். இறைவனது திருமேனி, கும்பத்தில் பாவிக்கப்படும்.

கும்பவஸ்திரம் உடம்பின் தோல்
நூல் நாட நரம்புகள்
குடம் உடல்
தண்ணீர் இரத்தம்
நவரத்தனங்கள் எலும்பு
தேங்காய் தலை
மாவிலை தலைமயிர்
தருப்பை குடுமி
மந்திரம் உயிர்

அம்மி மிதித்தல்

அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செயவதற்கு பயன்படும். பொருட்களை அரைப்பதற்கு பயன்படும் கருவியாகும். அம்மி மிக உறுதியுடனும், ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும். திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமியார், நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும், மன உறுதியுடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும்

அருந்ததி பார்த்தல்

அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் அவர்களின் மனைவியாவார். ஏழு ரிஷிகளும், வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள். இதைத் தான் நாம் துருவ நட்சத்திரம் என்கிறோம். ஏழு நட்சத்திரங்களில், ஆறாவதாக (நட்சத்திரம்) இருப்பவர் வசிஷ்டர் ஆவார். இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.
இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால், சப்த ரிஷி மண்டலத்தை காணலாம். ஆறாவது நட்சத்திரமாக ஒளி வீசும் வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும் பார்க்கலாம். மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா, ஊர்வசி, மேனகை இவர்களிடம் சபலபட்டவர்கள். அதேபோல் அவர்களுடைய மனைவிகளும், இந்திரனனின் மேல் சபலப்பட்டவர்கள்
ஆனால் வசிஷ்டரும், மனைவியும் ஒன்று சேர்ந்து, மற்றவர்களின் மீது எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள். அருந்ததி நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும், நம் கண்களுக்கு ஒரே நட்சத்திரமாக தெரிகிறது.
அதேபோல் மணமக்கம் இருவராக இருந்தாலும், எண்ணங்களும், சிந்தனைகளும் ஒன்றாக இருக்கவேண்டும். மணமகளும் அருந்ததியை போல் கண்ணியமாகவும், கட்டுபாட்டுடன் வாழ வேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்க சொல்கிறார்கள்.

ஏற்றி இறக்குதல்

மணமக்களை பாதுகாக்க இரு சுமங்கலிகள் மங்கலப் பொருட்களை (திருவிளக்கு, நிறைநாழி, சந்தனக்கும்பம், பன்னீர்ச் செம்பு, தேங்காய், பழம், குங்குமச்சிமிழ், மஞ்சள் பிள்ளையார் போன்றவை) தொட்டுச் செய்யும் சடங்கு. மேலும் அருவ நிலையிலிருந்து மணமக்களை ஆசிர்வதிக்கும் தெய்வங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும், முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப்படுவதும் உண்டு

அடை பொரி

பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும் பல உருவத்தைக் கட்டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும், திருமண நிகழ்வுகளால் ஏற்படும் பல்வேறு திருஸ்டி தோஷங்களை நீக்க வல்லது. இது அட்டத்திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம் ஆகும்.

நிறை நாழி

நித்தமும் குத்து விளக்கு என்று சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது ஐதீகம் ஆகும்.

ஒலுசை

ஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர். மணமகள் அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி. சிறப்பான இல்லற வாழ்விற்கு அத்தியாவசியமான பொருட்களை பொறுப்புணர்ச்சியுடன் பெண் வீட்டார் கொடுப்பது. ஒலுசைப் பொருட்களைப் பட்டியலிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந்து வருகிறது. இது வரவேற்க தக்க விசயமாகும்.

மணமகள் பொங்கலிடுதல்

முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த இறைவனுக்கும், முன்னோர்களுக்கும் சூரியன் முதலான தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும்.
மணமகள் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்பதைக் வெளிப்படுத்துவது. புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது.
இதுதான் மணப்பெண்ணின் முதல் சமையல். இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும் என்பதற்கான அறிகுறியே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.

பிள்ளை மாற்றுவது

எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச்சாரம். இனியும் நீங்கள் பச்சைக் குழந்தைகள் அல்ல என்பதை மணமக்களுக்கு உணர்த்தும் செயல்வடிவ உபதேசம். பிறக்கப் போகும் குழ்ந்தைகள் நல்ல முறையில் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒரு சேர வாழ்த்துவது திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு "மங்கலமென்ப மனைமாட்சி மற்று அதன் நஙலம் நன்மக்கட்பேறு" – திருவள்ளுவரின் வாக்காகும். நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு .

மறுவீடு

மணமகளின் பெற்றோரும் – உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று – விருந்துண்டு மகிழ்ந்து – உறவை வலுப்படுத்துவது ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும், புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச் செய்வதே – மறுவீடு ஆகும்

கோவிலுக்கு அழைத்துச் செல்லல்

நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும். வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன், இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேணடும்