திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையான ஆதீனமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் திருவாலங்காட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
திருக்கயிலாய பரம்பரை குருமரபில் தழைத்தோங்கி வருகின்ற இவ்வாதீனம் ஸ்ரீ மெய்கண்டாரின் வழிவழி சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற அருள்திரு நமசிவாய மூர்த்திகள் அவர்களால் கி.பி. 14- நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பெற்றது. சித்தர் சிவப்பிரகாசர், அருள் நமசிவாயரிடம் தீட்சை பெற்றவர். அருள் நமச்சிவாயர், உமாபதி சிவாச்சாரியாரிடம் உபதேசம் பெற்றவர்.
கிளைகள்
திருநெல்வேலிை |
கன்னியாகுமரி |
திருவெண்ணெய்நல்லூர் |
திருவண்ணாமல |
காஞ்சிபுரம் |
திருநள்ளாறு |
இராமேசுவரம் |
மதுரை |
திருச்செந்தூர் |
காசி |
காளஹஸ்தி |
உட்பட 50-இக்கும் மேற்பட்ட இடங்களில் இதன் கிளை மடங்கள் உள்ளன.
கோயில்கள்
திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் |
மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதசுவாமி திருக்கோயில் |
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில் |
திருவாலங்காடு திருக்கோயில் |
சூரியனார் கோயில் |
திருமங்கலக்குடி திருக்கோயில் |
நெல்லையில் உள்ள சந்திப்பிள்ளையார் |
குறுக்குத்துறை முருகன் கோவில் |
திருவாவடுதுறை & திருவிடைமருதூர் சுற்றியுள்ள பல கோயில்கள் |
உள்ளிட்ட 150-இக்கும் மேற்பட்ட இடங்களில் திருவாவடுதுறை மடத்திற்குச் சொந்தமான கோயில்கள் உள்ளன. குறிப்பாக இந்த அனைத்துக் கோயில்களும் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
தமிழ்நூல்கள் மற்றும் நூலகம்
இந்த ஆதீனம் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்நூல்களை வெளியிட்டும், மறுபதிப்புச் செய்தும் வெளியிட்டுள்ளது, திருக்குறளை முதன்முதலில் அடி, சீர் அமைத்து வெளியிடப்பட்டது, திருவாவடுதுறை ஆதீன சரஸ்வதி மகால் நூலகத்தில் சைவம், வைத்தியம், இலக்கணம், நாடகம், புராணம் எனப் பலதுறை சார்ந்த வேறெங்கும் காணக் கிடைக்காத அரிய பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 23-ஆவது குருமகாசந்நிதானத்தின் ஒப்புதலின் பேரில், சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளின் மறுவடிவ பாதுகாப்பும் புகைப்படம் எடுத்தலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தாரால் மேற்கொள்ளப்பட்டது.
குருமகா சந்நிதானம்
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் குரு மகா சந்நிதானம் திருவாவடுதுறை ஆதீனத்தைத் தோற்றுவித்த அருள்திரு நமசிவாயமூர்த்திகள் ஆவார். திருவாவடுதுறை ஆதீனத்தின் 23-ஆவது குருமகாசன்னிதானமாக 25 ஆண்டுகளாய் விளங்கியவர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். 2012-ஆம் ஆண்டு நவம்பர் 21 தேதியன்று அன்று இச்சுவாமிகள் முக்தி அடைந்தார். திருவிடைமருதூர் கோவில் கட்டளைத் தம்பிரானாக இருந்த மீனாட்சிசுந்தர தம்பிரான்(பெரிய பூசை தம்பிரான்) சுவாமிகள் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பண்டார சந்நிதிகள் என்ற பெயருடன் 24-ஆவது குருமகாசந்நிதானமாகப் பட்டமேற்றார்.